நாட்டுக்கோழி வளர்ப்பு முறையும்! அதன் பயன்களும்!

நாட்டுக்கோழி வளர்ப்பு முறையும்! அதன் பயன்களும்!


இறைச்சிக்கோழி இன்று கோடிகளில் விற்பனை ஆகும் புரத உணவு. மாநகரத்து ஐந்து நட்சத்திர உணவு விடுதி முதல் பேருந்துகூட செல்ல இயலாத கடைக்கோடி குக்கிராமம் வரை எளிதில் கிடைக்கக்கூடிய மாபெரும் சந்தையை உடைய தொழில்.


மிகப்பெரிய சந்தையும், உற்பத்தியும் உடைய இந்த இறைச்சிக் கோழி ஆறு வாரங்களில் இரண்டு கிலோவுக்கும் மேல் உடல் எடையை அடையும் இறைச்சி இயந்திரமாக இருக்கின்றன. இந்த ஆறு வார கோழிக் குஞ்சின் இறைச்சியில் அப்படி என்ன சுவையையும் மணத்தையும் எதிர்பார்த்திட முடியும்?

தான் உண்ணும் தீவனத்தை இறைச்சியாக மாற்றும் ஒரு உயர் இயந்திரம்தான் பிராய்லர் என்று அழைக்கப்படும் இறைச்சிக் கோழி. சுதந்தரக் காற்றைச் சுவாசித்து அறியாத பறவைகள் இவை. இறக்கை பறப்பதற்கும், கால்கள் விரைவாக ஓடிச் செல்வதற்கும் பயன்படும் என்பதை மறந்துவிட்ட பறவைகள்.
குஞ்சு பொரிப்பதில் இருந்து இறைச்சிக்காக கூண்டுகளில் அடைக்கப்படும் வரை எல்லாமே இயந்திரமயமாகவும், செயற்கைமயமாகவும், ரசாயனமயமாகவும் வளர்க்கப்படுபவை பிராய்லர்  இறைச்சிக் கோழிகள். இந்தக் கோழிகளின் இறைச்சியைச் சாப்பிடும் மனிதர்களுக்கும், இந்தக் கோழிகளின் கழிவுகளைச் சாப்பிடும் நாய் போன்ற பிற உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம், ஏராளம்...

நாட்டு மாடுகள், நாட்டு ஆடுகள் என்று நாம் மறந்துவிட்ட கால்நடைச் செல்வங்களின் வரிசையில் நாட்டுக் கோழிகளையும் கொண்டுவர வேண்டும். நம் நாட்டு இனங்களைப் பற்றி நினைத்தாலோ, பேசினாலோ, எழுதினாலோ பழமைவாதம் எனப் பலர் பேசுகின்றனர். நஞ்சற்ற உலகை மீட்டெடுக்க பழமைவாதமே சரியான தீர்வு. முன்னேற்றம், தொழில்நுட்பம் என்ற பெயரில் கூண்டுகளில் அடைத்து வளர்க்கப்படும் முட்டைக்கோழிகளும், இறைச்சிக் கோழிகளும் நம்முடைய இறைச்சி மற்றும் முட்டைத் தேவையை பூர்த்தி செய்திருக்கலாம். இறைச்சி விலை கட்டுக்குள் வைத்திருக்கலாம். ஆனால், இவை இயற்கைக்கு முரண்பட்டு எவ்வளவு பெரிய சமூக, பொருளாதார, உணவுக் கலாசார மாற்றத்தை ஏற்படுத்திவிட்டன என்பதை நாம் உணரவில்லை.

இந்தக் கூண்டுக் கோழிகளும், இறைச்சிக் கோழிகளும் வருவதற்கு முன் சந்தை அமைப்பு எப்படி இருந்தது. சின்னஞ் சிறிய குக்கிராமங்களில் புறக்கடையில் வளர்க்கப்பட்டு வந்த நாட்டுக் கோழிகளும், உற்பத்தி செய்யப்பட்ட நாட்டு முட்டைகளும் கூடை வியாபாரிகளால் வாங்கப்பட்டு, பெரு நகர சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு, பெரிய வியாபாரிகளால் மொத்தமாக சேகரிக்கப்பட்டு நகரத்து வீடுகளுக்கும், உணவகங்களுக்கும் பயணித்தன. கிராமத்தில் இருந்து நகரத்தை நோக்கிய பொருள் நகர்வும், நுகர்வும் என ஆரோக்கியமான வியாபாரம் இருந்தது.


ஆனால் இன்றைய நிலை தலைகீழாக இருக்கிறது. தமிழகத்தின் முட்டை தலைநகரமான நாமக்கல்லில் இருந்து புறப்படும் முட்டை லாரிகள், கிராமம் தவறாமல் கடை கடையாக முட்டை போட்டுக்கொண்டு செல்கின்றன. தத்தித் தவழ்ந்து செல்லும் பிராய்லர் கோழிகள், கறிக்கடைதோறும் இறக்கிவிடப்படுகின்றன. கோழி வளர்ப்பில் இருந்த கிராமப் பொருளாதாரம், கார்ப்பரேட் பொருளாதாரமாக மாறிவிட்டது.
நாட்டுக் கோழி வளர்ப்பு என்பது பெரிய விஷயமில்லை. படிப்பறிவும், பெரிய விஞ்ஞான அறிவும் இல்லாத கிராமத்து ஏழைப் பெண்ணால், ஒரு ஆண்டுக்கு ஒரு ஜோடி கோழியையும், சேவலையும் வைத்து 75 முதல் 80 குஞ்சுகளை உற்பத்தி செய்ய முடியும். சில இறக்கும். சிலவற்றை நாய், நரி, கழுகு தூக்கிக்கொண்டு போகும். சில திருடுபோகும். இருந்தாலும், நிகரலாபம் நிச்சயம் இருக்கும்.
நாட்டுக் கோழி பொருளாதாரம், என்றும் நஷ்டம் இல்லாத பொருளாதாரம். கொஞ்சம் விஞ்ஞானத்தையும் கொஞ்சம் அனுபவத்தையும் கலந்து நாட்டுக் கோழி வளர்த்து வெற்றிகரமாக பண்ணையம் செய்வோர் பலர். கோழிகளுக்கும் இவருக்குமான தொடர்பு 2002-ம் ஆண்டு ஏற்பட்டது. கோழி வளர்ப்பை கேவலமாக எண்ணிய காலம் இருந்தது. கோழி வளர்ப்பை ஒரு தொழிலாக எவரும் அங்கீகரிக்கவில்லை. கோழிப் பண்ணை வைத்திருப்பதை ஒரு கௌரவமான தொழில் என நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கோழிப் பண்ணைத் தொழில் ஒரு முழு நேரத் தொழில். கூலிக்கு மாரடிக்கும் தொழில் அல்ல. 365 நாட்களும் வேலை செய்ய வேண்டும். ஞாயிறு விடுமுறை இல்லை. வாரத்தின் ஏழு நாள்களும், ஒரு நாளின் 24 மணி நேரமும் கவனமாகச் செயல்பட வேண்டும். தனிப்பட்ட கவனம் இருக்க வேண்டும். தொழில் பக்தியும், ஈடுபாடும் இருக்க வேண்டும்.
 100 சதவீதம் சுத்தமான நாட்டுக் கோழிகளை வளர்க்க வேண்டும் என முடிவு செய்து, கிராமப் பகுதிகளில் அலைந்து திரிந்து, தாய்க் கோழிகளையும், சேவல்களையும் தேர்வு செய்ய வேண்டும். அவற்றைக் கொண்டு தனது புதிய கோழிப் பண்ணையைத் தொடங்க வேண்டும்.  ஒரு தீவன தொழிற்சாலையை நிறுவி, தனது வளர்ப்புக் கோழிகளுக்காக நேர்த்தியான தீவனத்தை உற்பத்தி செய்ய வேண்டும்.

அடுத்தது இனப்பெருக்கம்.:
தரமான நாட்டுக் கோழி முட்டைகளை ஆயிரக்கணக்கான குஞ்சுகளை உற்பத்தி செய்ய, அடைகாக்கும் தாய்க் கோழிகளை மட்டும் நம்பினால் பயன் இருக்காது. விஞ்ஞான வளர்ச்சியை பயன்படுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். செயற்கை முறையில் குஞ்சு பொரிக்க ஒரு இன்குபேட்டர், ஹேட்ச்சர், இவை தடையில்லாமல் இயங்க மின்சார ஜெனரேட்டர் என ஒரு முழுமையான ஹேட்ச்சரி உருவானது. வாரம் 30 ஆயிரம் முட்டைகள் பொரிக்கத் தக்க இன்குபேட்டரும் ரெடி.



முதலாவது, கோழிகளுக்கான வீடு அமைப்புக்கும், தண்ணீர் மற்றும் தீவனத் தொட்டிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். அடைத்து வளர்க்காமல் மேய்ச்சலுடன் கூடிய கொட்டகை முறை நல்லது. அப்போதுதான் தீவன செலவு கட்டுப்படும். வெளியில் அலைந்து திரிந்து, மண்ணை கிண்டிகிளறி புழு, பூச்சிகள், புல் பூண்டுகளை தின்று வளரும் கோழிதான், சதைப்பற்றுடனும் மணமான இறைச்சியுடனும் இருக்கும். வளர்ச்சி கொஞ்சம் தாமதமாக இருந்தாலும், இந்த முறைதான் நாட்டுக் கோழி வளர்ப்புக்கு ஏற்றது.


ஆனால், தாய் இன்றி இளம் குஞ்சுகளை வளர்க்க ஆரம்பத்தில்  புரூடிங் எனும் செயற்கை வெப்பத்தைக் கொடுக்க வேண்டும். புரூடிங் காலத்தில் வெப்பத்தைக் கொடுக்க கரிப்பானை அல்லது மின் விளக்கைப் பயன்படுத்தலாம். காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் வேலை செய்தால் போதுமானது. தண்ணீருக்கு நிப்பிள் ட்ரிங்கர் அல்லது ஆட்டோமேட்டிக் ட்ரிங்கர் அமைக்கலாம். இயற்கை முறையில் வளர்க்கிறேன் என்பதற்காக சுத்தமும் சுகாதாரமும் இல்லாத தண்ணீரைக் கொடுக்கக்கூடாது.

Comments

Popular posts from this blog

நாட்டுக்கோழி முட்டையின் பயன்கள்

தினமும் ஒரு கோழி முட்டை, டாக்டருக்கு ”குட்பை”!

இயற்கை முறையில் நாட்டு கோழி வளர்ப்பு முறை